வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ புதிய கூட்டணி
வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவச சட்ட உதவியை சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் இலவச சட்ட ஆலோசனை சேவைப் பிரிவு வழங்கும். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்
12 Jul 2021 05:30
வேலையிடத்தில் தமது சக ஊழியர் மீது கவனம் செலுத்தாததால் அவருக்கு காயம் ஏற்பட்டதற்கு தாம்தான் காரணம் என்று கூறி, தமக்கு வழக்கறிஞர் ஒருவரிடமிருந்து கடிதம் கிடைத்ததைப் பார்த்த வெளிநாட்டு ஊழியரான திரு ஜான் பிரிட்டோ அதிர்ச்சியடைந்தார்.
நல்லவேளையாக அந்த 37 வயது இந்திய நாட்டவர், அரசு சார்பற்ற அமைப்பான வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் ஆலோசனையை நாடினார். அது சக ஊழியர் காயமடைந்ததற்கு திரு ஜான் காரணமல்ல என்று தெரிவித்தது.
2019ல் தமக்கு அனுப்பப்பட்ட அந்த வழக்கறிஞர் கடிதம் பின்னர் மீட்டுக்கொள்ளப்பட்டது என்று ஜான், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
திரு ஜானைப் போல, மற்ற வெளிநாட்டு ஊழியர்கள் இப்போது புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு ஊழியர் குழுமத்திடமிருந்து உதவி பெறலாம்.
இந்தக் கூட்டணியில் சுமார் 20 அமைப்புகளுடன் சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் இலவச சட்ட ஆலோசனை சேவைப் பிரிவும் அடங்கியுள்ளது.
இதன் மூலம் சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர் சமூகத்தில் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும் நீதி தொடர்பான சேவைகள் பற்றிய ஆலோசனையை வழங்கவும் புதிய கூட்டணி எண்ணம் கொண்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவச சட்ட உதவியை சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் இலவச சட்ட ஆலோசனை சேவைப் பிரிவு வழங்கும்.
சட்ட நிறுவனங்களான ‘எல்லன் அண்ட் கிளேட்ஹில்’, ‘லீ ஷெர்கில்’, அரசு சாரா அமைப்புகளான ‘புரோஜெக்ட் எக்ஸ்’, ‘ஹோம்’ எனப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான மனிதாபிமான அமைப்பு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் போன்றவை புதிய கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் புதிய கூட்டணி, 2019 நான்காம் காலாண்டில் தொடங்கப்பட வேண்டியது. ஆனால், கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டது.
“கூட்டணியில் உள்ள உறுப்பினர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து, சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றுக்குத் தீர்வு காணும் வழிகள் பற்றியும் ஆராயும்.
“மேலும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவரவரின் தாய்மொழிகளில் சிங்கப்பூர் சட்டங்கள் மற்றும் அவர்களின் சட்ட உரிமைகள் பற்றியும் சிறப்பு விளக்கவுரைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
“தேவை ஏற்பட்டால், எங்கள் இலவச சட்ட ஆலோசனைப் பிரிவு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவசமாகவோ கழிவுக் கட்டணத்திலோ வழக்காடவும் செய்யும்,” என்றார் சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் திரு கிரெகரி விஜயேந்திரன்.
சட்டபூர்வமான உதவி தேவைப்படும் வெளிநாட்டு ஊழியர்களைத் தங்களின் நிபுணத்துவ சட்ட ஆலோசனைக் குழுக்களிடம் அனுப்பி வைக்குமாறு வெளிநாட்டு ஊழியர் தொடர்பான அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார் திரு கிரெகரி.
வேலையிடக் காயங்கள் பற்றியும் தங்கள் சொந்த விவகாரங்களை வெளிநாட்டு ஊழியர்கள் எவ்வாறு கையாளலாம் என்பதைப் பற்றியும் விளக்கும் காணொளியை நேற்று முன்தினம் நடைபெற்ற புதிய கூட்டணியின் தொடக்க விழாவில் திரையிட்டனர் ‘இட்ஸ்ரெய்னிங்ரேன்கோட்ஸ்’ எனும் அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த திருவாட்டி தீபா சுவாமிநாதன் மற்றும் வழக்கறிஞர் திரு ராஜ் சிங் ஷெர்கில்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, “வெளிநாட்டு ஊழியர்களின் உரிமைகள் பற்றியும் அவர்களுக்குஉள்ள பொறுப்புகள் பற்றியும் எமது அமைச்சு தொடர்ந்து அவர்களுக்குத் தெரிவித்து வரும்,” என்றார்.
அண்மைய காணொளிகள்
13:09