Source: provided திருவனந்தபுரம் : ஜிகா வைரஸ் பரவல் குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் 2-வது அலையை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்கும் கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளாவில் கடந்த மாதம் சிகிசைக்கு வந்த 24-வயதான கர்ப்பிணி பெண்ணுக்கு காய்ச்சல், தலைவலி, தோலில் தடிப்புகள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 13 பேரின் மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வக நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக கேரள அரசு அனுப்பி வைத்துள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:- கேரளாவில் மொத்தம் 14 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதார அமைச்சகம் உஷார் படுத்தப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பை பொறுத்தவரை எண்ணிக்கை சற்று அதிகரித்து இருந்தாலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றார்.